உலக நீரிழிவு தினத்தையொட்டி பேசாலை பிரதேச மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.
உலக நீரிழிவு தினம் நவம்பர் 14ஆம் திகதியாகும். இந்நிலையில், பேசாலை பிரதேச மருத்துவமனை பொறுப்பதிகாரி, மருத்துவக் கலாநிதி இ.ஈற்றன் பீரிஸ் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், இதில் பலர் கலந்துகொண்டு நன்மையடைந்தனர்.
நீரிழிவுநோய் வராது எவ்வாறு நாம் பாதுகாப்புப் பெறுவது? நீரிழிவுநோய் ஏற்பட்டால் நோயாளர் எவ்வாறான வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், நீரிழிவு நோயாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கவழக்க முறை தொடர்பாகவும் காண்பிக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு இலைக்கஞ்சியும் பரிமாறப்பட்டது.
பேசாலை மருத்துவமனைப் பொறுப்பதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் மற்றும் மருத்துவர்களான டினுஸ்க, பிரியா, தாதிகளுக்கான பரிபாலகர் ஈஸ்வரி ரவீந்திரன் ஆகியோர் நீரிழிவுநோய், அதனால் ஏற்படும் தீமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
தலைமன்னார் விசேட நிருபர்