தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்று அழுத்தத் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (13) காலை முதல் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் அடை மழை பெய்து வருகின்றது. மன்னாரில் மழையால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அங்குள்ள பல வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இந்நிலையில், மழையால் பொதுமக்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து சென்னையிலிருந்து பலாலி விமான நிலையம் நோக்கி நேற்று முன்தினம் பயணித்த விமானம், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானத்தில் 24 பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு பயணித்ததுடன், அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு வழங்கி, மாற்றுப் பயண ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பலாலி விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் குறூப், யாழ். விசேட நிருபர்கள்