புத்தரின் போதனைகளில் சமநிலைவாழ்வு என்று ஒரு சொல் உள்ளது. புத்தர் வியாக்கபஜ்ஜ சூத்திரத்தில் சகவாழ்வைப் பற்றி போதித்தார். அதற்கேற்ப வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பது பற்றி ; சமநிலைவாழ்வு மூலம் எமக்குக் கற்றுத்தருகின்றது.குறைந்த வருமானத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது தவறு என்றும், உண்மையான புரிதல் உள்ள ஒருவர் வரவு செலவை சமப்படுத்தி தனது வாழ்க்கைத் தரத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றது.வருமானத்திற்கு ஏற்ப செலவுகள் செய்யப்பட வேண்டும். அதைத்தான் பௌத்த பொருளாதார தத்துவம் நமக்குக் காட்டுகிறது. ஆனால், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாக நாம் வருமானத்துக்கு ஏற்ப செலவு செய்யவில்லை. இதை நான் கூறும்போது, இந்நாட்டு அரசாங்கங்கள் வீண் செலவு செய்துள்ளன என்று நினைக்கலாம். அரசாங்கங்கள் மட்டுமல்ல. இந்த நாட்டில் உள்ள நாம் அனைவரும் அந்த தவறை செய்துள்ளோம்.
தொழில்வாய்ப்புகளை வழங்கியமை, சம்பளம் அதிகரித்தமை, இலவசமாக அரிசி வழங்கியமை, சலுகைகள் வழங்கியமை மற்றும் அரச நிறுவனங்கள் பராமரிக்கப்பட்டமை அனைத்தும் கடன் வாங்குவதன் மூலமோ அல்லது பணத்தை அச்சிடுவதன் மூலமோ மேற்கொள்ளப்பட்டது. அரசாங்க வேலைவாய்ப்பு வழங்குதல், அரசாங்க வளங்களைப் பாதுகாத்தல், நிவாரணப் பொதிகள் வழங்குதல், பொருட்களின் விலைகளைக் குறைத்தல், கூடுதலான சம்பளம் வழங்குதல் போன்ற வாக்குறுதிகளின் மூலம்தான் தேர்தல்கள் வெற்றிகொள்ளப்பட்டன. இவ்வாறான வருமானமல்லா சுகவாழ்வு வாழ்வதற்கு நாம் நாட்டுக்கும் உலகத்திற்கும் கடன்பட்டோம்.
புத்தர் சாமஞ்ஞபல சூத்திரத்தில், கடன்களை முதலீட்டிற்காக எடுக்க வேண்டுமேயன்றி நுகர்வுக்காக அல்ல என்று சுட்டிக்காட்டுகிறார். ஆனால் நாம் நுகர்வுக்காக கடன் வாங்கினோம். இவ்வாறு கடன் வாங்குவதும் வட்டி செலுத்துவதும் மிகவும் ஆபத்தானது என அங்குத்தர நிபாதவின் இண சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமநிலைவாழ்வு மற்றும் பௌத்த பொருளாதார தத்துவத்தை புறக்கணித்ததன் விளைவாக, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னரும், நாம் பெரும் ஆபத்திற்கு உள்ளாகினோம். நமது பொருளாதாரம் முற்றிலும் வீழ்சிசியடைந்தது. வங்கரோத்து அரசாக மாறியது.
இரண்டு அல்லது மூன்று லீட்டர் பெற்றோலுக்கு சண்டைபிடித்தோம். எரிவாயு தாங்கிகளுக்காக வாக்குவாதம் செய்தோம். ஒரு நாளைக்கு பத்து பதினைந்து மணித்தியாலங்கள் இருட்டில் இருந்தோம். பல்பொருள் அங்காடிகள் விறகுக்கட்டுகளை விற்கத் தொடங்கின. வியாபாரங்கள் வீழ்ச்சியடைந்தன. சுற்றுலாத் துறை விழ்ச்சியடைந்தது. வேலைவாய்ப்புகள் இல்லாமல்போனது. அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் போனது. எல்லா இடங்களிலும் வரிசைகள். பொது போக்குவரத்து சேவைகள் முடங்கின. பள்ளிகள் மூடப்பட்டன. பரீட்சைகளை நடத்த முடியவில்லை. உரத் தட்டுப்பாட்டால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. எமக்கு எஞ்சியது நாடு அல்ல, ஒரு நரகம்.
NATIONAL-BUDGET-2024-TAMIL-1இந்த நரகத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும் சவாலை யாரும் ஏற்க விரும்பவில்லை. அந்தரே கல்லை தூக்கியது போன்று பல்வேறு காரணங்களை கூறி சவால்களை தட்டிக்கழித்தனர். சிலர் ஜாதகம் பார்த்தார்கள். மற்றவர்கள் அரசியலமைப்பு ரீதியாக நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.
இந்தப் பின்னணியில்தான் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.
அந்த நேரத்தில் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு நோயாளியை நான் ஏற்றுக்கொண்டேன். நரகமாக மாறியிருந்த ஒரு நாடு. தடம் புரண்டு நாலாபுறமும் வீழ்ந்துகிடந்த பொருளாதாரம்.
பல்வேறு தடைகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் முறையான மற்றும் முறைமைவாய்ந்த திட்டத்தின் கீழ் நாங்கள் இரவு பகல் பாராது வேலைசெய்ய ஆரம்பித்தோம். நாட்டை நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்கு போராடினோம். அரச உத்தியோகத்தர்கள் அயராது உழைத்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிக்கு உதவிசெய்தனர். எங்களுடைய அனைத்து நட்பு நாடுகளும் தங்களால் இயன்றவரை எங்களை கவனித்துக்கொண்டன. நிவாரணங்களை வழங்கின.
அப்போது, விரிவான சீர்திருத்தத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், பொருளாதாரத் துயரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றவும் கடுமையாகப் பாடுபடுவேன் என்று உங்கள் அனைவருக்கும் பகிரங்கமாகக் கூறினேன். இந்த முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் பங்களிப்புச்செய்தது நான் மட்டுமல்ல. அதற்காக இந்நாட்டு மக்கள் கடுமையாக உழைத்தனர். அதற்காக அர்ப்பணித்தனர். அவ்வாறு செய்யாமல் நாட்டை பின்னுக்கு தள்ளுவதற்கு முயன்றவர்களும் இருந்தனர். ஆனால் தற்போது அவர்களின் எதிர்பார்ப்புகளை தகர்த்து நாட்டில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை தற்போது மீண்டும் சீரான பாதைக்கு எம்மால் கொண்டு வர முடிந்துள்ளது. அதற்காக ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போன்ற பல தற்காலிக நடவடிக்கைகளை எடுத்தோம். ஆனால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. இப்போது நாங்கள் நீண்ட கால மற்றும் நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரமாகும். அப்போதுதான் தடம் புரண்ட பொருளாதாரம் மீண்டும் சீரான பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும். அப்போதுதான் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பொருளாதாரத்தை முழுமையாக குணமடையச் செய்ய முடியும்.
இது எளிதான பணி அல்ல. ஆனால் நம்மால் அதனைச் செய்ய முடியும். நாம் செல்லும் பாதையில் மென்மேலும் புதிய எண்ணக் கருத்துக்களால் போசிக்கப்பட்டு தொடர்ந்து சென்றால் இந்த சவாலை நம்மால் வெற்றிகொள்ள முடியும்.
சமநிலைவாழ்வு என்ற கருத்திற்கு அப்பால் சென்று அரசியல் ஆதாயம் அடையக்கூடிய விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தி தீர்வுகளைக் காண முயல்வது தோல்விக்குறியது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. தோல்வி அடைவேன் என்று தெரிந்தும் ஏன் அதையே மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள்?
தேவதைக் கதைகளைச் சொல்வதால் நாடு முன்னேறாது. கனவு மாளிகைகளிலிருந்து வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளால் நாடு நீண்ட காலமாக பின்னோக்கி சென்றது. அதன் இறுதி முடிவு நாடு வங்குரோத்துநிலையை அடைவதுதான் என்பது நம் கண் முன்னே உறுதி செய்யப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக, நாட்டில் உள்ள சில குழுக்கள் இந்த நிலைமையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
அரசியல் நோக்கத்திற்காக மாயைகளை பரப்புவதை நிறுத்துமாறு நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நமக்கு நாமே நேர்மையாக இருப்போம். அரசியலை விட நாட்டை பற்றி சிந்திப்போம். நாட்டை மேலே உயர்த்தி வைப்பதற்கு ஒன்றுபடுவோம். நாடு வலிமையான பின்னர், அரசியல் இலக்குகளை பற்றி யோசிப்போம்.
ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட இப்போது நம் நாட்டில் நிலைமை நன்றாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் நல்ல நிலையில் உள்ளது என்று நான் கூறவில்லை. அன்று இருந்ததை விட ஒப்பீட்டளவில் இன்று சிறப்பாக உள்ளது. சிரமங்களை எதிர்கொண்டு அந்த நிலையைப் பெற்றோம். அர்ப்பணிப்புகளைச் செய்து, துன்பங்களை எதிர்கொண்டு அந்த நிலையை அடைந்தோம்.
இந்த கடினமான பாதையில் நாம் படிப்படியாக முன்னோக்கிச் சென்றால், குறுகிய காலத்தில் நாம் ஒரு சிறந்த பொருளாதார சூழலை நிச்சயமாக உருவாக்க முடியும். நாம் செல்லும் இந்தப் பாதை சரியானது என்பதை கடந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கும்போது, 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் பெற்றோலுக்கு ஒரு மனிதனைக் கொன்ற நாடு இன்று வரிசையோ அல்லது வரையறைகளோ இல்லாமல் பெற்றோல் பெறுகிறது. எரிவாயு சிலிண்டர் ஒன்றை வாங்குவதற்கு வாரக்கணக்கில் தெருத் தெருவாக அலைந்து திரிந்த நாடு, இன்று ஒரே தொலைபேசி அழைப்பில் வீட்டுக்கு எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்கின்றது. ஒரு நாளைக்கு பத்துப் பன்னிரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்த நாடு இன்று தொடர்ச்சியாக மின்சாரத்தைப் பெற்று வருகிறது. பல்பொருள் அங்காடிகள் முதல் மளிகைக் கடைகள் வரை விறகுக் கட்டுகளை விற்று வந்த நாடு இன்று மாற்றமடைந்துள்ளது. அதாவது நாம் சரியான பாதையில் செல்கிறோம். எங்கள் திட்டங்கள் சரியானவை. எங்கள் உபாயத்திட்டம் சரியானது. எனவே, கடினமாக இருந்தாலும், இந்த பயணத்தில் நாம் முன்னோக்கிச் செல்வோம்.
இந்தப் பயணம் இதுவரை முன்னேறியிருந்தாலும், சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. அவைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். நாங்கள் மிகவும் பணிவுடன் அந்தக் குறைகளையும் தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கு செயல்பட்டு வருகிறோம்.
தடம் புரண்ட பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் வைப்பதால் மட்டும் நாம் திருப்தியடைய முடியாது. அது மாத்திரம் நமக்கு பெரிய நிம்மதியையும் ஆறுதலையும் தரப்போவதில்லை. எங்கள் கடினமான காலம் இன்னும் முடிவடையவும் இல்லை. முழு நாடும் வெவ்வேறு வழிகளில் சிரமங்களை எதிர்கொள்கிறது.
பணவீக்க வேகத்தை ஒற்றை இலக்கத்திற்குக் கொண்டு வர முடிந்தபடியினால், அதிக பணவீக்கத்தின் அழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இந்த கடுமையான நெருக்கடியின் காரணமாக, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பளத்தையும் வருமானத்தையும் இன்னும் அதிகரிக்க முடியவில்லை. எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஒவ்வொரு குடும்பமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வரி அதிகரிக்கப்பட்டதால், தனிநபர்கள் மட்டுமின்றி, சிறு வியாபாரங்கள் முதல் பெரிய அளவிலான வணிகங்கள் வரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
நாட்டு மக்கள் படும் இன்னல்கள் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். நிலையான மற்றும் வளர்ச்சியடையும் பொருளாதாரத்திற்கான பயணம் அழகானதாக இல்லை. அது கடினமானது; முட்கள் கொண்டது; சவால்மிக்கது.
வங்குரோத்து அடைந்த நாட்டை மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும். இந்த இக்கட்டான காலத்தை கடந்துவிட்டால், வசதியான, அழகான சமுதாயத்தை உருவாக்க முடியும். அவ்வாறு இல்லையெனில், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கனவு மாளிகைகளைக் கட்ட முற்பட்டால், நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும்.
நாங்கள் இது வரை வந்த பயணத்தில் எனது வெற்றிக்குக் காரணம், நாம் தொடங்கிய பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டமாகும். இந்த சீர்திருத்தத் திட்டம் 2022 ஆம் ஆண்டைப் போல் பொருளாதார நரகத்தில் விழாமல் முன்னேறுவதற்கு இந்த மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் அடித்தளம் அமைத்துள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் மின் உற்பத்திக்காக அரசு செலவழிக்கும் தொகைக்கு ஏற்றவாறு மின்கட்டணத்தை திருத்தும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால், மின்சார சபைக்கு கடும் நட்டம் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டு வரை இந்த நட்டங்களை ஈடுசெய்வதற்கு இரண்டு அரச வங்கிகளிலிருந்து நிதியைப் பெற்றுக்கொண்டது. மேலும், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நட்டமடைந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டமும் இரண்டு அரச வங்கிகளின் நிதியால் ஈடுசெய்யப்பட்டது. இந்த நிலைமை எவ்வளவு தூரம் தீவிரமடைந்துள்ளதென்றால், தற்போது இரண்டு அரச வங்கிகளின் ஐந்தொகைகளும் பலவீனமான நிலைக்குச் சென்றுள்ளன. இந்த இரண்டு வங்கிகளையும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நிதியை செலவழிக்க வேண்டியுள்ளது. அந்த நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது? அந்த நிதியை மக்களிடமிருந்து அறவிடும் வரிப் பணத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் தங்கள் நட்டத்தை ஈடுசெய்வதற்கு அரச வங்கிகளிலிருந்து கடன் வாங்குகின்றன. எனவே, அரச வங்கிகள் பலவீனமாக இருக்கும்போது, வங்கிகள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நிதியை வழங்குகிறது. அந்த நிதியை சம்பாதிக்க வேண்டுமாயின், மக்கள் மீது அதிக வரிச் சுமையை சுமத்த வேண்டியேற்படுகின்றது.
சில குழுக்கள் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று அரச ஊழியர்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் கடினமான காலம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு, நாம் நாளுக்கு நாள், படிப்படியாக முன்னேற வேண்டும். இது கடினமான பயணம். ஒருபுறம் வேலை நிறுத்தங்களால் முன்னேற்றம் தடைப்படுகிறது. மறுபுறம், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
சம்பள உயர்வு பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். நினைத்தவாறு சம்பள உயர்வை வழங்க முடியாது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசின் வரி வருவாயில் 35 சதவீதம் செலவிடப்படுகிறது. மேலும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால், அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும்.
அரசாங்க வருவாயை அதிகரிக்காமலும் தேவைப்பட்டால் சம்பளத்தை அதிகரிக்கலாம். அது எப்படி? ஒன்றில் நீங்கள் பணத்தை அச்சிடல் வேண்டும் அல்லது வெளிநாட்டிலிருந்து கடன் பெற வேண்டும். அப்படி இல்லையென்றால் புதிதாக வரி விதிக்க வேண்டும். அந்த நடைமுறை சமநிலைவாழ்வு எண்ணக்கருவுக்கு எதிரானது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டை மீண்டும் பாதாளத்தில் தள்ளும்.
மின்சார சபை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பாரிய தொகையை செலவழிக்கிறது. இதன் விளைவாக, பெரிய அளவிலான, குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை பிரதான மின்கட்டமைப்பில் சேர்ப்பதற்குத் தேவையான சட்டரீதியான தடைகள் அனைத்தையும் நாம் அகற்றியுள்ளோம். வினைத்திறனற்ற மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக அதனை மீள்கட்டமைப்புச் செய்வதற்கான சட்டவிதிகள் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. திறமையாக மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக மாற்றங்களைச் செய்த பின்னர், மக்களின் மின் கட்டணம் தற்போது இருப்பதிலும் பார்க்க மிதமானதாக இருக்கும்.
சில அரசியல் குழுக்கள் மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எப்படியாவது மின்கட்டணத்தைக் குறைக்குமாறு அவர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட காரியத்தில் என்ன நிகழ்கிறது என்றால், நாம் மீண்டும் அந்த தீய சுழற்சிக்கு பலியாகிவிடுகிறோம். அது சமநிலைவாழ்வு என்ற எண்ணக்கருவை நிராகரிப்பதாகும்.
அரச வரிகளை உயர்த்துவது குறித்தும் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. நாம் ஏன் வரியை உயர்த்த வேண்டி ஏற்பட்டது? வரிக் கட்டமைப்புகள் மாற்றங்கள் மற்றும் வரி சீர்திருத்தங்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டன. இதன் காரணமாக அரசிறைத் துறை நலிவடைந்தது. அதை மீண்டும் வலுவாக வைத்திருப்பதற்கு, கட்டாயமாக வரி அமைப்பில் கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்தது.
அரச துறையினரின் சம்பளத்தை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் 93 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. அஸ்வெசும, மருந்துகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற பொது மக்கள் நலன்புரிக்காக ரூபா 70 பில்லியன் செலவிடப்படுகிறது. அதேநேரம், ரூபா 220 பில்லியன் கடன் வட்டி கொடுப்பனவுகளுக்காக செலவிடப்படுகின்றது. இந்த விடயங்களுக்கு மாத்திரம் செலவாகின்ற மாதாந்த அரசாங்க செலவினம் ரூபா 383 பில்லியன் ஆகும். 2023 இன் முதல் 9 மாதங்களில், எங்கள் மாத வரி வருவாய் 215 பில்லியன் ஆகும். ரூபா 168 பில்லியன் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறையை நிரப்புவதற்கு, மேலும் கடன் வாங்க வேண்டியுள்ளது.
இதுவரை நிலுவைத் தொகையை செலுத்தியது எவ்வாறு? வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக் கொள்கிறோம். இலங்கை வங்கிகளில் இருந்து மேலதிகப் பற்றுகளைப் பெறுகிறோம். இந்த இரண்டு முறைகளிலும் நிலுவைத் தொகையை கட்ட முடியாதபோது, பணத்தை அச்சிடுகிறோம்.
வெளிநாட்டு கடன்களை மீள்கட்டமைப்புச் செய்யும் வரை வெளிநாட்டு நிதி மற்றும் வெளிநாட்டு கடன்களை வரையறுக்கப்பட்ட அளவிலேயே பெற்றுக் கொள்ள முடியும். 2021 இல் 900 பில்லியன் ரூபாய் வங்கி மேலதிகப் பற்று பெறப்பட்டது. இப்போது வங்கி மேலதிகப் பற்றைப் பெறுவது ரூபா 70 பில்லியன் வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி பணத்தை அச்சிட முடியாது. இதன் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இலிருந்து 15% ஆக அரசாங்க வருவாயை அதிகரிக்காவிட்டால், நாம் மீண்டும் பொருளாதார நரகத்தில் விழுவோம். வரி விலக்கு செய்யப்பட்டால், மற்றொரு வழியில் நிரப்புதல் செய்யப்பட வேண்டும். சில குழுக்கள் கூறுவது போல், எளிய – அழகான வாக்குறுதிகள் மூலம் இந்தப் பிரச்சினை தீராது.
இந்த ஆண்டு நாம் இலக்கு வைத்துள்ள அரச வருமானம் ரூபா 3415 பில்லியன் ஆகும். இதுவரை நாம் ஈட்டிய வருமானம் ரூபா 2410 பில்லியன். அதாவது இலக்கு வைக்கப்பட்ட வருமானத்தை ஈட்டத் தவறிவிட்டோம். இந்த உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசின் இலக்கு வருமானத்தை ஈட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பல சந்தர்ப்பங்களில், அதிக வருமானம் உள்ளவர்களிடம் புதிய வரிக் கோப்பைப் பதிவு செய்யும்படி கேட்டிருந்தோம். ஆனால் பெரும்பாலானவர்கள் அவ்வாறு செய்யவில்லை. வரிக் கோப்பினைத் திறந்த பின்னர், இல்லாத பிரச்னைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்ற நம்பிக்கைதான் இதற்கு அடிப்படைக் காரணம். அது உண்மைதான். வரி விதிப்பில் தேவையற்ற சிக்கல்கள் உள்ளன. சில அதிகாரிகளின் தேவையற்ற செல்வாக்கிற்கு அடிபணிய வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. வரி செலுத்துவது ஒரு தலைவலியை ஏற்படுத்துகின்ற அளவிற்கு சில கட்டண முறைகள் மிகவும் சிக்கலானவை,
நமது வரி அமைப்பில் உள்ள இது போன்ற பல கடுமையான குறைபாடுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். தற்போது மொத்த வரிச்சுமை சமூகத்தின் வரையறுக்கப்பட்ட சில பிரிவுகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. வருவாய் சேகரிப்பு அமைப்புகளில் நீண்டகாலமாக இருந்துவருகின்ற பலவீனங்கள் மற்றும் கவனிக்காததன் காரணமாக வரி புறக்கணிப்பு ஏற்படுகிறது.
இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பல முன்மொழிவுகளை இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் சேர்த்துள்ளோம். இந்த முன்மொழிவுகளை ஒரே இரவில் செயல்படுத்த முடியாது. அவை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். அந்த முன்மொழிவுகள் மூலம் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் போது, இன்றைய காலத்தை விட அதிக வரிச்சலுகைகளை வழங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
அரச செலவினத்தைக் குறைப்பதன் மூலம் மக்களின் வரிச்சுமையைக் குறைக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் அரச செலவினங்களில் கூடுதலான சதவீதம் அதாவது 35 சதவீதம் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகிறது. தற்போது அரச பணியாளர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியனாக உள்ளது. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவர்களை வேலையிலிருந்து நீக்க முடியாது. அப்படிச் செய்வது மிகப்பெரிய சமூக நெருக்கடியை உருவாக்கும். எனவே, இந்த பிரச்சனைகளை நாம் மிகவும் கவனமாகவும், உணர்வுபூர்வமாகவும் எதிர்கொள்ள வேண்டும்.
ஆனால் அரசின் வீண் செலவுகளை குறைக்க வேண்டும். அரச நிறுவனங்களில் எவ்வளவு பணம் வீணாகிறது? எவ்வளவு கால விரயம் ஏற்படுகின்றது? இவற்றையும் நாம் தவிர்க்க வேண்டும். ஒரு சாதாரண குடிமகன் அரச நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும்போது எவ்வளவு நேரமும், உழைப்பும், பணமும் விரயமாகிறது? இங்கே நாம் இந்த குறைபாடுகளையும் தவறுகளையும் திருத்திக்கொள்ள வேண்டும்.
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களால் நாட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களின் இழப்பை மக்கள் முழுமையாக தாங்கிக் கொள்கின்றனர். தேசிய வளங்கள் என்று கூறிக்கொண்டு மக்கள் மீது தமது சுமையை தொடர்ந்து சுமத்தும் அரசியல் குழுக்கள் நாட்டை பின்னுக்கு இழுக்கின்றன.
மேலும் ஊழலும் மோசடியும் நாடு முழுவதும் புற்று நோயாக பரவியுள்ளது. நாட்டின் செல்வங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் சட்டங்களை இப்போது சமர்ப்பித்துள்ளோம். நாட்டின் செல்வம் மற்றும் வளங்களை திருடுவதாக பல்வேறு மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனால் நாட்டின் செல்வங்களையும் வளங்களையும் கொள்ளையடித்தவர்களைப் போலவே நாட்டின் எதிர்காலத்தையும் திருடியவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
சில அரசியல் குழுக்கள் வெற்றிகரமான வணிகங்களை மக்கள் மயமாக்கி நாட்டின் எதிர்காலத்தைத் திருடியுள்ளனர். திருகோணமலையில் எண்ணெய் தாங்கிகள் போன்ற வீணாகும் இடங்களை வேறு நாடுகளுக்கு குத்தகைக்கு விடுவதை எதிர்த்ததோடு நாட்டின் எதிர்காலத்தையும் திருடினார்கள். இன்னும் சிலர் ஆடைத் தொழிலை எதிர்த்து நாட்டின் எதிர்காலத்தைத் திருடினார்கள். துறைமுகங்களின் அபிவிருத்தியை எதிர்ப்பதன் மூலம் எதிர்காலம் திருடப்பட்டது. இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த மக்கள் செய்வதும் களவுதான்.
அனைத்து அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் எதிர்க்கும் அரசியல் குழுக்கள் திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்தி செய்ய அனுமதிக்கவில்லை. அந்த எண்ணெய் தாங்கிகள் துருப்பிடிக்க இடமளிக்கப்பட்டதைப் போன்று நுவரெலியா தபால் நிலையமும் இடிந்து விழுவதை அவர்கள் விரும்புகின்றனர்.
நுவரெலியா தபால் நிலையம் சுற்றுலாத் துறைக்காக ஒதுக்கப்பட்டமை ஒரு தனிச் சம்பவம் அல்ல. நுவரெலியா அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்காலத்தில் நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் எதிர்பார்ப்பும் எங்களிடம் இருக்கின்றது. நுவரெலியாவில் இன்னும் பல பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் நுவரெலியாவின் சூழலையும் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களையும் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்றன.
காலி கோட்டையில் உள்ள பழைய தபால் நிலைய கட்டிடத்திற்கும் இந்த மக்கள் இதனையே செய்தனர். தற்போது அந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. சரியான நேரத்தில் அந்தக் கட்டிடம் சுற்றுலாத் துறைக்காக ஒதுக்கப்பட்டிருந்தால், அந்த வரலாற்றுக் கட்டிடம் நமக்கும் உண்டு. அந்நியச் செலாவணியும் கிடைக்கும்.
பொருளாதார ஆய்வாளர் சுசந்த ஆரியரத்ன அண்மையில் முகநூலில் வெளியிட்ட பதிவை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
“அரச வளங்களை பாதுகாப்பதற்கான சூத்திரம் அரச வளங்களுக்கு கைவைக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்வதல்ல. அந்த வளங்களிலிருந்து அதிக பயனைப் பெற்றுக் கொள்வதாகும். அப்போது அவை யாருக்கும் பாரமாக இருக்க மாட்டாது.”
இதுவரை காலமும் அரச வளங்களைப் பாதுகாப்போம் என்ற கோஷத்தின் கீழ் செயற்பட்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாததாகும். அவற்றை நாடு தாங்க முடியாத அளவுக்கு சுமையாக மாற்றியமையாகும்.
சிந்தித்துப் பாருங்கள். இதுவரை நம் நாட்டில் செயல்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார கருத்துக்கள் தோல்வியடைந்து விட்டன. தயவுசெய்து அவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஊங்களுடைய அண்டை வீட்டாருக்கும் அதை புரியவையுங்கள். நாம் புதிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை உருவாக்கவில்லை என்றால், இங்கிருந்து முன்னோக்கி செல்ல வழியில்லை.
நாட்டில் இதுவரை காணப்பட்ட அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதார அமைப்பு முற்றிலும் தலைகீழாக மாற வேண்டும். கடந்த வரவுசெலவத் திட்டத்திலும் அதைத்தான் சுட்டிக் காட்டினேன். ‘மாரா சாத்| நாடகத்தில் சுகதபால டி சில்வா சொல்வது போல் – தலையணை உறையைப் போல் தலைகீழாகப் புரட்டி புதுக்கண்ணால் பார்க்க வேண்டும்.
கடந்த காலத்திலிருந்து நம் நாட்டில் வேரூன்றியிருந்த சமூக ஒருமித்த கருத்து, எல்லாவற்றையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என்பதாகும். அதனால்தான், தனியார் தொழில்களை முடக்கி, அந்தத் தொழில்களைக் கையகப்படுத்தி அனைத்து தொழில் முனைவோர் நடவடிக்கைகளிலும் அரச தலையிட்டது. ஆனால் சமூக உடன்பாடு தோல்வியடைந்த, காலாவதியான ஒன்று என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த கால அனுபவங்கள், உலகளாவிய போக்குகள் மற்றும் எதிர்கால சவால்கள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு நமக்கென்று ஒரு தனித்துவமான பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும். புதிய சமூக கருத்தொற்றுமை உருவாக்கப்பட வேண்டும்.
இந்த புதிய முறைக்கு அடித்தளமிட்டதன் மூலம், கடந்த ஆண்டில் நாம் பின்பற்றிய சரியான நடைமுறைகள் மற்றும் முறைகள் காரணமாக பொருளாதாரம் மீண்டு வருகிறது. இப்போது தட்டுப்பாடு இல்லாமல் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 30% ஆக உயர்ந்திருந்த வட்டி விகிதங்கள் இப்போது 15% ஆகக் குறைந்துள்ளன. மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. 2021 இல் நமது முதன்மை வரவுசெலவுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக இருந்தது. 2023 இன் முதல் பாதியில் முதன்மை வரவுசெலவுத் திட்ட மிகையை உருவாக்க முடிந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் வரி வருவாயை 50 வீதத்தால் அதிகரிக்க முடிந்தது. 2022 செப்டம்பரில் 70 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம், கடந்த செப்டம்பரில் 1.38 சதவீதமாகக் குறைந்துள்ளது. பூச்சியமாக சரிந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, டொலர் 3.5 பில்லியன்களாக உயர்ந்தது. வெளிநாடுகளின் நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.
இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டிற்காக நேர்மையான நோக்கத்துடன் செய்த தியாகங்களினாலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு அவர்கள் வழங்கிய தைரியத்தின் காரணமாகவும் கடந்த வருடத்தில் நாம் அபிவிருத்தி முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இந்த சிரமங்களைப் போக்குவதற்குத் தேவையான பின்னணியை அரசு முறையாக வழங்கி வருகிறது. நமது பொருளாதாரம் மீண்டு வரும்போது, நமது பொருளாதாரம் உறுதியானதாகும் போது, மக்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
2022 இல் மீண்டும் அதே நரகத்தில் நம் நாடு விழுவதை அனுமதிக்க முடியாது. அந்த நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு வந்து தமது அரசியல் இலக்குகளை நிறைவேற்ற சில குழுக்கள் இரவு பகலாக முயற்சித்து வருகின்றன. ஆனால் எங்களுக்கு அரசியல் இலக்குகள் இல்லை. நாட்டை உயர்த்துவது மட்டுமே எங்களின் ஒரே நோக்கமாகும்.
சிலர் இந்த வரவுசெலவுத் திட்டத்தை தேர்தல் வரவுசெலவுத் திட்டம் என்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் இவ்வாறு அழைக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முடிவில்லாத சலுகைகளையும் சம்பள அதிகரிப்பையும் வழங்குவதே அத்தகைய தேர்தல் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. சுதந்திரம் அடைந்த பின்னரும் 75 வருடங்களில் பலமுறை அதுதான் நடந்தது.
ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் வித்தியாசமானது. இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவுசெலவுத்திட்டமாகும். தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப ஒரு புதிய பொருளாதார அமைப்பின் அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டம். பலமான எதிர்காலத்திற்கான முன்னுரை.
தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே எனக்கு முக்கியம். இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் வெற்றிக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும். பௌத்த பொருளாதார தத்துவத்தின்படி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம். சமநிலைவாழ்வு என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், நாட்டுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் பல முன்மொழிவுகள் இந்த வரவுசெலவுத திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நான் தற்போது 2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைக்கிறேன்.