ஊடகவியலாளர்கள் சமூகத்தில் கௌரவமான பொறுப்பை சுமந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் தமது பொறுப்பையும் கடமையையும் சமூகத்தின் எதிர்காலம் நோக்கியதாக முன்னெடுக்க வேண்டும். இதனை மையமாக தொண்டு ஊடகப் பணி அமைய வேண்டும் என இலங்கை இராணுவத்தின் ஊடகத்துறை ஆலோசகர் டி.பி. சிசிர குமார விஜயசிங்க தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தினருக்கும் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் இடையில் நல்லிணக்க புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக இலங்கை இராணுவத்தின் 24வது படைப்பிரிவு மற்றும் இளைஞர் தன்னார்வக் குழு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஒரு நாள் செயலமர்வு 24 வது இராணுவ படை பிரிவின் அம்பாறை – மல்வத்தை தலைமை அலுவலகத்தில் (11) நடைபெற்றது. இலங்கை இராணுவத்தின் 24வது படைப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் இலங்கை இராணுவத்தின் ஊடக ஆலோசகர் டி.பி சிசிர குமார விஜயசிங்க வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து இங்கு விளக்கமளிக்கையில், இராணுவத்தினருக்கு இந்த நாட்டை பாதுகாப்பதற்கும் அவர்களுடைய கடமையை செய்வதற்கு எவ்வாறு பொறுப்புக்கள் இருக்கிறதோ அதேபோன்று ஊடகவியலாளர்களுக்கு இந்த நாட்டை பாதுகாப்பதற்கும் அவர்களுடைய கடமையை செய்வதற்கும் பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால் இன்று சில ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் அரசியல் சார்ந்தவர்களால் வாங்கப்படுகின்ற துர்ப்பாக்கியமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பயணிக்க வேண்டும். மக்களுக்கு ஒரு தகவலை சொல்லுகின்ற பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. அதனை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
(பெரியநீலாவணை விசேட நிருபர்)