கேகாலை மாவட்டத்தில் உள்ள தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமாகிய மனோ கணேசன், ககனடிய தமிழர் பேரவையின் இலங்கைக்கான மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் துசியந்தன் துரைரட்ணம் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்த நிகழ்வின்போது உரையாற்றிய துசியந்தன் துரைரட்ணம், இந்தப் பணிக்காக நன்கொடை வழங்கி உதவிய கனடியர்கள் மற்றும் அமெரிக்க தமிழர்களுக்கு கனடிய தமிழர் பேரவையின் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார்.
மேற்படி கட்டடத்தின் முதலாவது தள நிர்மாணத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டும் விதமாக கடந்த செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி 2023 அன்று கேனடிய தமிழர் பேரவையினரால் நிதிசேர் நடைபயணம் நிகழ்த்தப்பட்டது. தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலயமானது மண்சரிவு காரணமாக 2016 ஆம் ஆண்டு மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அபாயமான சூழ்நிலையை உருவாக்கியது.
இதன் காரணமாக பாடசாலை தொடர்ந்து அதே இடத்தில் இயங்குவது பாதுகாப்பானது அல்ல என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் பிறகு பாடசாலைக்ெகன அரசாங்கத்தால் குறித்த பாடசாலையின் அமைவிடத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் பாதுகாப்பான நிலம் வழங்கப்பட்டிருந்தது.
மேற்படி திட்டத்திற்கான மொத்தச் செலவு கேனடிய டொலர் $100,000 இற்கும் அதிகமாகும். அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம், தளபாடங்கள் மற்றும் ஆய்வுகூட உபகரணங்கள் என அனைத்தும் அதனுள் அடங்கும்.
அத்துடன் இந்தக் கட்டட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் பெப்ரவரி 2024இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் 05 தொடக்கம் தரம் 13 வரையிலான வகுப்புகள் இருப்பதோடு 600 இற்கு மேற்ப்பட்ட மாணவர்களும் கற்றுவருகிறார்கள்,
உயர்தரத்தில் கலைப்பிரிவை மாத்திரம் கொண்டிருக்கும் இப்பாடசாலையில் உயர் தர விஞ்ஞான ஆய்வுகூடம் இல்லாமையினால், விஞ்ஞான பாடத்தை தெரிவுசெய்ய விரும்பும் மாணவர்கள் ஒன்று கலைப்பீடத்தை தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அல்லது தமது வசிப்பிடங்களில் இருந்து வெளியிடங்களுக்குச் சென்று பயில வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்நிலையை கருத்தில் கொண்டே, மேற்படி திட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறது கேனடிய தமிழர் பேரவை.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்கள் மலையகத்தில் குடியேறி இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்னமும் பல்வேறுபட்ட அடிப்படைப் பிரச்சினைகளுடனேயே அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அவர்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு கல்வியே இன்றியமையாத தேவைப்பாடுடையது என்பதாலும் மனோ கணேசன் எம்.பியின் அறிவுரைக்கு அமையவும் கனடிய தமிழர் பேரவையினரின் இவ்வாண்டுக்கான நிதிசேர் நடை பயணம் ‘மலையக தமிழர்களின் கல்விக்காக’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.