சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலால் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ஹோல் ஒப் பேம் விருதை இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா பெற்றுக்கொள்ளவுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அரவிந்த டி சில்வாவுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி மும்பையில் வைத்து இந்த விருது வழங்கப்படவுள்ளது.
அரவிந்த டி சில்வா 19 வருட காலமாக கிரிக்கெட் ஆடியுள்ளதுடன் ஒட்டுமொத்தமாக 401 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 93 டெஸ்ட் போட்டிகளில் 42.97 என்ற ஓட்ட சராசரியில் 6361 ஓட்டங்களை விளாசியுள்ளதுடன், 308 ஒருநாள் போட்டிகளில் 34.90 என்ற சராசரியில் 9284 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சதம் விளாசி அணி முதல் உலகக் கிண்ணம் வெல்ல காரணமாக இருந்தார்.
இதுவரை இலங்கையின் மூன்று வீரர்களுக்கு மாத்திரமே சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலால் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ஹோல் ஒப் பேம் விருது வழங்கப்பட்டுள்ளது. குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.