காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று (07) இரவு வர்த்தக நிலையங்கள் மீது ஏற்பட்ட தீ பரவலினால் புடவைக் கடை உட்பட மூன்று கடைகள், வாகனங்கள் கழுவும் இடம் மற்றும் வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
வர்த்தக நிறுவனத்தின் மீது திடீரென ஏற்பட்ட தீ பரவல் ஏனைய இடங்களுக்குப் பரவியமையே சேதத்திற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஒரு புடவைக் கடை, பழைய சாமான்கள் வாங்கி விற்கும் இரண்டு நாடான் கடைகள் உட்பட மூன்று கடைகளும், வாகனங்கள் கழுவும் இடம் மற்றும் அங்கிருந்த சிறிய ரெக்டர் வாகனம், ஜெனரேட்டர்கள் உட்பட பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து
தீயை அணைத்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் இயந்திரத்தின் மூலமும் தண்ணீர் தெளிக்கப்பட்டு தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து குறித்த பகுதியின் வீதி மூடப்பட்டு ஒரு வழிப்பாதையால் போக்குவரத்து இடம்பெற்றது.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்