Saturday, May 11, 2024
Home » இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலுக்கு ஹுத்திக்கள் உறுதி

இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலுக்கு ஹுத்திக்கள் உறுதி

by Rizwan Segu Mohideen
November 2, 2023 12:41 pm 0 comment

இஸ்ரேலுக்கு எதிராக மூன்று தடவைகள் ஆளில்லா விமானம் மற்றும் பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய யெமனின் ஈரான் ஆதரவு ஹுத்தி கிளர்ச்சியாளர்கள், காசா போர் தொடர்ந்தால் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். “காசா ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களுடன் கடுமையான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என்பதை யெமன் இராணுவம் உறுதி செய்கிறது” என்று ஹுத்தி இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலை நோக்கி பெரும் எண்ணிக்கையான பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பெரும் எண்ணிக்கையான ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களை கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பியதாக ஹுத்திக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அனைத்து வான் அச்சுறுத்தல்களும் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்திருந்தது.

முன்னதாக கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி தெற்கு காசாவை நோக்கில் வந்த ஆளில்லா விமானத்தை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியதோடு ஒக்டோபர் 17 ஆம் திகதி அமெரிக்க கடற்படை இஸ்ரேலை நோக்கிச் சென்ற மூன்று ஏவுகணைகள் மற்றும் பல ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது. ஹுத்திக்களின் அச்சுறுத்தல் அதிகரித்ததை அடுத்து இஸ்ரேல் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் செங்கடலில் ஏவுகணை கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.

2014 ஆம் ஆண்டு யெமன் தலைநகர் சனாவை கைப்பற்றிய ஹுத்திக்கள் அந்நாட்டின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT