ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபாவாகவுள்ள வைப்புத் தொகையை 26 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கான வைப்புத் தொகையை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 31 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் வைப்புச் செய்யக் கூடிய தொகையில் 25 இலட்சம் ரூபாயை திரும்பப் பெறக்கூடிய தொகையாகவும், எஞ்சிய ஒரு இலட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்த முடியாத வைப்புத் தொகையாகவும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சுயேச்சை வேட்பாளரின் வைப்புத் தொகையில், 30 இலட்சத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.