மாத்தளை ஆமினா மகளிர் தேசிய பாடசாலையின் இஸ்லாமிய தின விழா நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி ஜே.எஸ்.எம்.பfவாயிதா தலைமையில் அண்மையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இந்நிகழ்வில் இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபரும் கணக்காளருமான இர்பான் அஸீஸ் பிரதம அதிதியாகவும் மாத்தளை கல்விப் பணிமனையின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் எம்.ஆர்.யூ. ரிழ்வான் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மத்திய மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
இந் நிகழ்வில் மத்திய மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளுக்கிடையில் இஸ்லாமியத்தின போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இப்போட்டிகளில் முதலிடத்தைப் பெற்ற கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கான வெற்றிக் கேடயமும் பிரதம அதிதியின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் ஞாபகார்த்தமாக “அல்-அஸீஸ் ” எனும் பெயரில் சஞ்சிகையும் வெளியிடப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். பிரதம அதிதி உரையாற்றும்போது; மாத்தளை ஆமினா மகளிர் பாடசாலை ஆரம்பத்தில் ஒரு கலவன் பாடசாலையாக இயங்கியபோது அதன் இறுதி அதிபராகவும், பின்னர் இது முஸ்லிம் மாணவிகளுக்கான தனிப் பாடசாலையாக தனித்துவம் பெற்று சாஹிரா பெண்கள் பாடசாலை என நாமம் பெற்று பெண் அதிபர் (லைலா மொஹிதீன்) ஒருவரின் கீழ் வளர்ந்தோங்குவதற்கும் பாடுபட்ட பெரியார்களில் ஒருவராகவும் திகழ்ந்த Y அப்துல் அஸீஸ் அவர்களின் பெயரிலேயே இச் சஞ்சிகை வெளியிடப்பட்டமை விசேட அம்சமாகும். மாணவிகளின் பல்வேறு ஆக்கங்கள் எழுத்தணிகளை உள்ளடக்கியுள்ள இச்சஞ்சிகையில் “Y.அப்துல் அஸீஸ் அதிபரின் வாழ்வும் பணியும்” எனும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான மாத்தளை ஜெஸீமா ஹமீட் அவர்களால் ஒரு ஆய்வு கட்டுரை எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதம அதிதியின் உரையைத் தொடர்ந்து இவ்விழாவில் உரையாற்றிய மாத்தளை கல்விப் பணிமனையின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் எம்.ஆர்.யூ.ரிழ்வான் தனது உரையில் ” இங்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் இர்ஃபான் அஸீஸ் அவர்கள் பற்றி கூறுவதாயின் அவர் சமூக பணியில் ஈடுபட்டு வரும் சிறந்த சமூக சேவையாளர் ஆவர். தனது சொந்த நிதியை கொண்டு அவர் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்கு செல்லும் பலர் இவர் மூலம் பல்வேறு நன்மைகளை அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
எஸ். சதுர்தீன் (மாத்தளை சுழற்சி நிருபர்)