நீதவான் நீதிமன்றிலிருந்து தப்பி வந்த சந்தேக நகர் ஒருவர் நீதி மன்றில் வைத்து சட்டத்தரணி ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நேற்று (18) கலகெதரயில் இடம் பெற்றுள்ளது.
கலகெதர நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் சட்டத்தரணி ஒருவரின் கழுத்தை நெறிக்க முற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது நீதிமன்றில் இருந்த பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் அந்த நபரை மடக்கிப்பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டத்தரணி மருத்துவ சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி சந்தேக நபர் கண்டி களுவான பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 760 மில்லிகிராம் கஞ்சாவை உடன் வைத்திருந்ததாகத் தெரிவித்தே கலகெதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சமயமே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அக்குறணை குறூப் நிருபர்