யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அந்தவகையில் காங்கேசன்துறையிலுள்ள மேற்படி ஜனாதிபதி மாளிகை கட்டடத்தில் தகவல் தொழினுட்ப பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 50 வருட காலத்திற்கு இது, குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டின் பெறுமதி 5000 பில்லியன் ரூபா என்றும் இலங்கை தொழினுட்ப நிறுவனம் கனேடிய முதலீட்டாளர் ஒருவருடன் இணைந்து, இந்த பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், கனேடிய முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் இந்தி பத்மானந்தன், தகவல் தொழினுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் எல். ரத்நாயக்க உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)