இந்தியா, இலங்கைக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று காலை தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இக்கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் இந்தக் கப்பல் சேவையை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார்.
‘செரியாபாணி’ என்ற மேற்படி இக்கப்பல் இன்றைய தினம் தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரை முதலாவது கப்பல் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
மேற்படி கப்பல் நேற்றும் நேற்று முன் தினமும் பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இப்பரீட்சார்த்த சேவை
வெற்றிகரமாக அமைந்ததாக சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.குளிரூட்டப்பட்ட நவீன வசதியுடன் கூடிய ‘செரியாபாணி’பயணிகள் கப்பல் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரை பயணிப்பதற்கு.6000 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கப்பல் பயணத்திற்காக ஒரு வழி கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. இதுபற்றிய விபரங்களை இந்திய கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் தம்முடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும். குறித்த இக்கப்பல் இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து மூன்று மணி நேரத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)