முல்லைத்தீவு, நீதிபதி விடயத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை. அதனை நிறுத்திக்கொள்ளலாமென்பதே தனது கருத்தென தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி தலைமையாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”தற்போது முல்லைத்தீவு நீதிபதி அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனை முன்னிறுத்தி போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
நீதிபதி விடயத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை. நிறுத்திக் கொள்ளலாம் என்பதே எனது கருத்து.
ஏனெனில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது இன்று நேற்று இடம்பெறும் விடயமல்ல. இது சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு தெரியும்.
2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் பாராளுமன்றம் சென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் அங்கு உள்ளனர்.
அவர்கள், தாங்களாகவே கள்ள வாக்களித்ததாக கூறியவர்கள் இன்றும் பாராளுமன்றத்திலுள்ளனர்.இருந்தபோதும் இலங்கை சட்டம் அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
ஆகவே, இலங்கையில் நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களை பாதுகாக்கின்றபோது, மக்களை கட்டுப்படுத்துவதற்கு புதுச் சட்டங்கள் தேவையில்லை.
இலங்கையின் தற்போதைய நிலையில் தேவையற்ற சட்டங்களான பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் என்பன தற்போதைய சூழ்நிலையில் தேவையற்ற ஒரு விடயம்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஊடக நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் என்பவற்றை சட்டமாக்கும் செயற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன.
நாட்டுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமானால் 24 மணி நேரத்துக்குள் பாராளுமன்றத்தை கூட்டி சட்டம் இயற்ற முடியும் என்றார்.