இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரித்துள்ளமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள இலங்கையர் தொடர்பில் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிநாட்டமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதுடன் மேலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க, சகல தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக்கொள்கிறது. 1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே வாழும் இரு நாடுகளின் சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுகோல்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஆதரவளிக்க இலங்கை உறுதியாக உள்ளது.
அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் மற்றும் ரமல்லாவிலுள்ள இலங்கை தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையருடன் தொடர்பிலும் உள்ளன.