தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தீ சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாக வைத்தியசாலையிலிருந்த மருத்துவ உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இதில் பல தரப்பட்ட மருந்துப் பொருட்கள்,ஆய்வுக் கூட உபகரணங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.
திருகோணமலை தீ அணைக்கும் பிரிவு மற்றும் முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவத்தினர் , பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நேற்று அரச பகுப்பாய்வு திணைக்களம், தடயவியல் பொலிஸார் இணைந்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பவ இடத்தில் காணப்பட்ட மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஊடாக மருந்துப்பொருட்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
(தம்பலகாமம் குறூப் நிருபர்)