ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உக்ரைன் முன்வைத்த அமைதித் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
அந்தத் திட்டத்துக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவளிப்பதைத் லாவ்ரோவ் கண்டித்தார்.
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் உலக நிறுவனத்தின் முயற்சி நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றார் லாவ்ரோவ். உக்ரைனியப் போரை மேற்கத்திய நாடுகள் வழிநடத்துவதாக அவர் சாடினார்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராகக் கூடுதல் ஆதரவு திரட்ட உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 10 அம்ச அமைதித் திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார்.
கிரைமியா உட்பட உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லாப் பகுதிகளில் இருந்தும் ரஷ்யப் படையினர் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பதும் திட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும்.