இலங்கையும் இந்தியாவும் பிரித்தானியர்களின் ஆட்சியின் கீழ் செயற்பட்டு வந்த காரணத்தினால் இரு நாடுகளின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் தடைப்பட்டன. அதேபோல், நாடுகள் முன்னேறுவதற்காக இருந்த காலம் வீணடிக்கப்பட்டது. இந்தியா இன்று சகல துறைகளிலும் முன்னேறி வருவதுபோன்று இலங்கையும் இந்தியா போன்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. நாட்டை முன்னேற்றுவதே அரசியல்வாதிகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக மாத்திரம் வேலைசெய்வார்களேயானால் நாடு முன்னேற்றமடையாது என ஹம்பாந்தோட்டை இந்திய துணைத்தூதரகத்தின் புதிய துணைத்தூதுவராக பதவியேற்றுள்ள ஜெனரல் ஹர்விந்தர் சிங் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை இந்திய துணைத்தூதரகத்தில் புதிதாக கடமைப் பொறுப்புகளையேற்றுள்ள புதிய துணைத் தூதுவருடனான ஊடகவியலாளர் சந்திப்பு (18) ஹம்பாந்தோட்டை துணைத்தூதரகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய புதிய துணைத்தூதுவர், இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களின் கல்விக்காக பாரியதொரு தொகைப் பணத்தினை செலவு செய்து வருகிறது. திறமையுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களது திறமைகளை நாட்டிற்கு பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தியாவின் இன்றைய கல்வி முன்னேற்றத்திற்கு காரணம் கல்வி அபிவிருத்தியாகும் என்றும் துணைத்தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்