தாய்வான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் குறுகிய காலத்திற்கு அமெரிக்க விஜயம் மேற்கொண்டதை அடுத்து நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கு உறுதியான மற்றும் வலிமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது.
லாய் பரகுவே செல்லும் வழியில் நியூயோர்க்கில் தரையிறங்கிய சில மணி நேரங்களின் பின்னரே சீனா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
தாய்வானை தனது ஆட்புலத்தின் அங்கமாக சீனா கருதுவதோடு லாய்யின் பயணத்தை கண்டித்துள்ளது. தாய்வான் சுதந்திர பிரிவினைவாதிகளின் எந்த வகையிலான அமெரிக்க பயணத்தையும் சீனா எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
‘லாய் தாய்வான் சுதந்திரத்தின் பிரிவினைவாத நிலைப்பாட்டை பிடிவாதமாக கடைப்பிடிப்பதோடு ஒரு பிரச்சினையை உருவாக்குபவராக உள்ளார்’ என்று சீனாவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.