சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று (09) மதியம் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவி பாடசாலை முடித்து தனது தாத்தாவுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற வேளையில் தனியார் பேருந்து மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 11 வயதான ந.சர்மிதா என்ற சிறுமி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை ஏற்றிச் சென்ற 77 வயதான முதியவர் கையில் சிறு காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சாவகச்சேரி விசேட நிருபர்