கண்டி சுதுஹும்பொல பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (25) ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுஹும்பொல பிரதேசத்தில் அறையொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத 52 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ஹோட்டல் ஒன்றில் வேலையை செய்வதற்காக கண்டிப் பிரதேசத்தில் தங்கியிருந்ததாகவும், சில வருடங்களுக்கு முன்னர் சுதுஹும்பொல பிரதேசத்துக்கு வந்து, அங்குள்ள ஒரு காணியில் தற்காலிக வீடொன்றை நிர்மாணித்து தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் வசித்த அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அங்குச் சென்ற போதே, பெண்ணொருவர் இறந்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்தப் பெண் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்னர் மரணமடைந்து இருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார் மரண பரிசோதனைக்காக சடலத்தை கண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
அக்குறணை குறூப் நிருபர்