இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்துடன் தொடர்புடைய 13 இலட்சம் தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட தடயவியல் தணிக்கையில் அடையாளம் காணப்பட்ட ஆரம்பக்கட்ட தகவல்கள் நேற்று முன்தினம் (15) கிடைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X (ரூவிட்டர்) பக்கத்திலேயே அமைச்சர் இவ்வாறு
தெரிவித்துள்ளார். X பதிவில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ள போது,
“பிரதான தரவுக் கட்டமைப்பிலிருந்து அல்லது SAP தளத்திலிருந்து 13 இலட்சம் தரவுகள் அழிக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து தரவு அழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன. எரிபொருள் நெருக்கடி நிலவிய 2022ஆம் ஆண்டிலேயே பெருமளவான தரவு அழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான முழுமையான அறிக்கை எதிர்வரும் வாரம் KPMG நிறுவனத்தால் வழங்கப்பட்ட பின்னர், அதனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்க தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிக்கையை மேலதிக நடவடிக்கைக்காக அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்துக்கும் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கும் சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.