தோப்பூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரிவில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட சுமார் 5250 ஏக்கர்களுக்கும் அதிகமான பெரும்போக நெல் அறுவடை தற்போது பரவலாக இடம்பெற்றுவருவதாக தோப்பூர் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அதேநேரம் இதற்கு அண்மித்த முன்னம்போடிவெட்டை, மூதூர் கிளிவெட்டி சம்பூர் ஆகிய கமநல சேவை நிலைய பிரிவுகளிற்குட்பட்ட பகுதிகளிலும் செய்கை பண்ணப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் அறுவடையும் இங்கு நடைபெறுகின்றன.
தோப்பூர் கமநல சேவைப்பிரிவில்நெல் அறுவடையானது இங்குள்ள எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இடம்பெறுகிறது.
கீரிசம்பா நெல் ஏக்கர் ஒன்றிற்கு 25 – 30 மூடை நெல் விளைவு பெறப்படுவதாக இங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் அறுவடை நடைபெறும் இடத்திற்கு லொறிகளில் வரும் வெளியூர் தனியார் நெல் வியாபாரிகள் 69 கிலோ நிறை கொண்ட ஒரு மூடை நெல்லை 9200 ரூபா விலைகளில் கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .கீரிசம்பா நெல் விதைத்த விவசாயிகள் நெல் அதிக விலைப்போவதால் தமக்கு கூடிய இலாபம் கிடைத்ததாகவே கூறுகிறார் .
அதேநேரம் நாடு ஒரு மூடை நெல் 5700 ரூபாவாக விலைபோகிறது. இது தொடர்பில் விவசாயிகளிடம் வினவியபோது சிலர் தமக்கு இலாபம் கிடைப்பதாகவும் , சிலர் தமக்கு இலாபம் கிடைக்கவில்லை என்பதாகவும் இன்னும் சிலர் தமது முதல் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும் மாறுபட்ட விதங்களில் பல்வேறு விதமாக தெரிவிக்கின்றனர்.
வெளியிடங்களிலிருந்து இங்கு வரும் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடைக் கூலியாக 13500 ரூபா ஏக்கர் ஒன்றிற்கு செலவாகிறதெனவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.
தோப்பூர் தினகரன் நிருபர்