ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளார். சகலரும் அதற்காக தயாராகுமாறு வேண்டுகோள் விடுப்பதோடு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை எவராலும் தடுக்க முடியாது. அவர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்யும் அநுராதபுரம் மாவட்ட மாநாடு அண்மையில் அநுராதபுரம் இளைஞர் சேவை கூட்ட மண்டபத்தில் கட்சியின் பெருந்தொகையான உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பாக போட்டியிடுவார். சகலரும் அதற்காக தயராக வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் விடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை எவராலும் தடுக்க முடியாது அவர் மீது மக்கள் அசையாத நம்பிக்கை வைத்துள்ளனர்.
2020 தேர்தலின் போது கட்சி வீழ்ச்சி அடைந்து இருந்த போது மீண்டும் எழுந்து நிற்க முடியாது என சகலரும் எண்ணினர். இருந்தபோதும் நாடு வீழ்ச்சி அடைந்த போது அச்சமின்றி முன்வந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இரண்டு வருடங்கள் முடிவதற்கு முன்னர் நாட்டை சரியான வழியில் இணைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கி ஒக்டோபர் தேர்தலில் வெற்றிபெறச் செய்வோம் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் போது அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்தன, பிரதி தலைவர் அகிலவிராஜ் காரியவசம், பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார , முன்னாள் அமைச்சர் பீ. ஹரிசன், ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அநுராதபுரம் மேற்கு, அநுராதபுரம் தினகரன் நிருபர்கள்