ஜோர்தானில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க தொலைக்காட்சியான சி.பி.எஸ். நியூஸ் வியாழக்கிழமை (01) வெளியிட்ட செய்தியில், கடந்த ஞாயிறன்று சிரியா மற்றும் ஜோர்தான் எல்லையில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த இரு நாடுகளிலும் உள்ள ஈரானிய நபர்கள் மற்றும் நிலைகள் மீது தாக்குதல் நடத்த வெள்ளை மாளிகை ஒப்புதல் அளித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியாகி இருக்கும் இந்த செய்தியில் மேலதிக விபரங்கள் எதுவும் கூறப்படவில்லை. அமெரிக்க தளம் மீதான தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள போராட்டக் குழு ஒன்று பொறுப்பேற்றது. காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்தது தொடக்கம் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது.
எனினும் காசா போர் வெடித்தது தொடக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் அங்குள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.