பறகஹதெனிய தேசிய பாடசாலையின் 2023ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் பறகஹதெனிய தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் அதிபர் ஐ.அப்துர் ரஹ்மான் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பறகஹதெனிய தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் பரிசில்கள் வழங்கி ஊக்கமூட்டப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் 100 க்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழுடன் பதக்கமும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களான, எம்.எச்.எம். தாரிக் ( 149), எம்.எஸ்.எஸ். ஸஹீமா ( 150), எம்.ஐ. ஹில்மா ( 152), எம். ஆர். றிபாத் (159), எம். எஸ். துர்ரா (163), எம். ஆர். றுஹ்மா ( 165), ஆர்.எப். பர்ஹா ( 169), எம். எஸ். ஸஹீர் அஹமட் ( 188) ஆகியோருக்கு சான்றிதழ், பதக்கம் என்பவற்றுடன் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் தரம் 5 இல் கல்வி கற்பித்த ஆசிரியர்களும் கேடயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் தற்போது தரம் நான்கில் கல்விகற்கும், அடுத்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களை ஊக்கமளிக்கும் விதமாக அவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.