இலங்கையைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக இஸ்லாமிய அறிவுசார் புத்திஜீவிகளை முஸ்லிம் சமூகம் அடுத்தடுத்து இழந்து வருவது ஆழ்ந்த கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அனுதாபச் செய்தியொன்றின் ஊடாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த வாரத்தின் ஆரம்ப நாட்களிலேயே குர்ஆனிய சமூகத்தை உருவாக்குவதற்காக அயராது ஈடுபட்டுழைத்த இரு பெரும் ஆளுமைகள் இறைவனின் நாட்டப்படி எங்களை விட்டு மறைந்தது முஸ்லிம்கள் மத்தியில் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருப்பதாக உணர்கிறேன் .
செவ்வாய்க்கிழமை(19) அதிகாலையிலேயே புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் ஷெய்க் முஹம்மத் முனீர் இவ்வுலக வாழ்வை நீத்துவிட்ட செய்தி வெளியாகியது. அதற்கு முன்னதாக, பதுளை மாவட்டத்தில் இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் சன்மார்க்கப் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து செயலாற்றிவந்த அஷ் ஷெய்க் ரிஸான் ஸெய்ன் (நளீமி)யின் மறைவுச் செய்தி எங்களை எட்டியிருந்தது.
இவர்கள் இருவரிலும் ஒத்த தன்மைகள் சிலவற்றைக் காண்கின்றோம். அல் குர்ஆனின் போதனைகளின் அடிப்படையில் இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றி ,இஸ்லாத்தின் தூதை உரிய முறையில் எத்தி வைப்பதற்காக இருவரும் அர்ப்பணிப்புடன் உன்னதமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் ஆற்றியுள்ள அரும் பணிகளை அங்கீகரித்து, இருவருக்கும் மேலான ஜென்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவனபதியை வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.