திறப்பனை பிரதேசத்தில் பல மாதங்களாக சுற்றித் திரிந்த மற்றுமொரு யானை இப்பிரதேசத்தில் காயம் அடைந்து சிகிச்சை வழங்கப்பட்டு அண்மையில் திறப்பனை பிரதேச எதுன்கம காட்டுப் பகுதியில் விடப்பட்ட “அக்கோ யானையை” காட்டுக்குள் அழைத்துச் செல்வதற்காக திறப்பனை கனுமுல்லேகம ஏரிக்கு வர ஆரம்பித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று (09) காலை வேளை கனமுல்லேகம குளத்துப் பகுதிக்கு வந்த இந்த யானை, அக்போ யானையை அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளது. அவ்வேளை அக்போ யானை குளத்துப் பகுதியில் இருந்ததால் , யானையை தேடி வந்த குறிப்பிட்ட அந்த யானை மட்டும் மீண்டும் காட்டுக்குள் சென்றுள்ளது.
இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பல மாத காலங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த அக்போ யானை, காயம் குணமடைந்த பின்னர், திறப்பனை எதுங்கம உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றித் திரிந்து உணவு உண்டு வருவது வழக்கம்.
வனவிலங்கு அதிகாரி அலுவலகம் இது பற்றி தெரிவித்ததாவது:
நோய் வாய்ப்படுவதற்கு முன்பு அக்போ யானையுடன் காட்டில் கூட்டத்திலிருந்த யானை ஒன்றே அவ்வப்போது அக்போவை தேடி வர ஆரம்பித்துள்ளது. இதன் போது பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பினால் அக்போவை தேடி வந்த யானை, காட்டுக்குள் துரத்தப்பட்டது.
எவ்வாறாயினும், அக்போ யானையை மீண்டும் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக இந்த யானை அவ்வப்போது அக்போ யானை இருக்கும் இடங்களுக்கு அடிக்கடி வரக்கூடும் எனவும் வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
திறப்பனை தினகரன் நிருபர் – ஏ.ஆர்.எம்.ரபியுதீன்