நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், நாடு முழுவதும் 72,840 டெங்கு நோயாளர் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மிகுந்த அவதானம் கொண்ட வலயங்களாக 45 வலயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 34,645 டெங்கு நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அது 47.5% எனவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் எச்சரிக்கை மிகுந்த வலயங்களாக 10 பிரதேசங்களும் கம்பஹா மாவட்டத்தில் 08 பிரதேசங்களும் களுத்துறை மாவட்டத்தில் 03 பிரதேசங்களும் கண்டி மாவட்டத்தில் 11 பிரதேசங்களும் மாத்தளை மாவட்டத்தில் 02 பிரதேசங்களும் காலி மாவட்டத்தில் 02 பிரதேசங்களும் மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தலா ஒரு பிரதேசமும் புத்தளம் மாவட்டத்தில் 04 பிரதேசங்களும் கேகாலை மாவட்டத்தில் 03 பிரதேசங்களும் பதிவாகியுள்ளன.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 15,464 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 14,596 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,585 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,068 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 3,371 பேரும், கேகாலை மாவட்டத்தில் 3,065 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2,933 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 2,797 பேரும் பதிவாகியுள்ளனர்.
நவம்பர் 06 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை 1,586 டெங்கு நோயாளர் பதிவாகியுள்ளதுடன், அது 3.5 வீத அதிகரிப்பாகும் என்றும் அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்