கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 11 கோடி ரூபா பெறுமதியான 16 தங்க ஜெல் மாத்திரைகளை கொண்டு வந்த ஒருவர், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு கொம்பனித் தெருவில் வசிக்கும் 32 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை 01.40 மணியளவில் துபாய் ஏர்லைன்ஸில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் பயணித்த விமானத்துக்குள் பிரவேசித்த அதிகாரிகாரிகள், அவரை கைது செய்தனர். சோதனையில் சுமார் 06 கிலோ 423 கிராம் மற்றும் 09 மில்லி கிராம் எடையுடைய தங்க ஜெல் 16 மாத்திரைகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இந்த தங்க ஜெல், ஆய்வறிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவரது கையடக்கத் தொலைபேசி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை பெற விமான நிலைய சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த அறிக்கைகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கும் வரை சந்தேக நபர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.