நாட்டில் புதிய முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அதன் கீழ், இலங்கை பொருளாதார ஆணைக்குழு மற்றும் அதுசார்ந்த அலகுகளை நிறுவன ரீதியாக தாபிப்பதற்குமான படிமுறைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதலீடு மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக்கு மிகவும் நட்பு நேயமான சூழலை உருவாக்க, வலுவான பொறிமுறை இருக்கவேண்டியதன் அவசியம் கருத்திலெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையை ஒருங்கிணைத்து புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு 2023.01.16 இல், இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதனால், இப்பணிகளுக்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்ளும் வகையில், இத் துறைகளில் நிபுணத்துவமுள்ளவர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து புதிய நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இம்முன்மொழிவுகளுக்கு ஏற்ப புதிய முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதற்காக, ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.