நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரமிடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்பகுதிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர், இரு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவைகளை துரிதமாக மீள ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். நாகப்பட்டினம், காங்கேசன்துறைக்கிடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வருடம் ஒக்டோபர் (17) ஆரம்பமாகியது.பின்னர் இச்சேவை நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் ஆரம்பமாகி தற்போது மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலே சந்தோஸ் ஜா இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 15 முதல் 17 வரை சந்தோஸ் ஜா வட பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தில், அவர் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகள், இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியதாக உயர்ஸ்தானிகராலய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.