பலாங்கொடை மண்சரிவு அனர்த்தத்தில் காணாமல் போனதாக கூறப்படும் நால்வரை, தேடும் பணிகள் இரண்டாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பலாங்கொடை பஸ்கந்த பகுதியில் கடந்த (12) இரவு பெய்த கடும் மழையால், மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த 03 வீடுகள் சேதமடைந்தன வீடொன்றில் இருந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் மண் மேட்டின் கீழ் புதையுண்டார்களா? என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து கையடக்க தொலைபேசி, உயிரிழந்த ஒருவருடையதாக சந்தேகிக்கப்படும் கால்பாதத்தின் ஒருபகுதி என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையிலே நால்வரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.
இதேவேளை, பலாங்கொடை கௌரான்ஹேன கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வேஹிந்தன பிரதேசத்தில் மண்சரிவால், ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.