அரசாங்க சேவையில் நான்கு தரங்களில் பணி புரியும் தாதியர்கள் 60 வயதில் கண்டிப்பாக ஓய்வு பெற வேண்டும் என அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை, செல்லுபடியற்றதாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நேற்று கட்டளையொன்றை பிறப்பித்துள்ளது.
அத்துடன் 60 வயதில் ஓய்வு பெறும் தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு, பொது நிர்வாக அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் அரச சேவையில் உள்ள முதல் தரம், விசேட தரம், அதி விசேட தரம், மற்றும் நிறைவேற்று தரம் ஆகிய தரங்களில் சேவையிலுள்ள தாதியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிப்பதற்கும் நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் தாதியர்கள் 60 வயதில் கண்டிப்பாக ஓய்வு பெறும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களை, செல்லுபடியற்றதாக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் அது தொடர்பில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரி,
தாக்கல் செய்த வழக்கும் நிறைவுக்கு வந்துள்ளது.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தேசிய வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தரான புஷ்பா ரம்யா லதா டி சொய்சா உள்ளிட்ட தரப்பினர் இது தொடர்பில், இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கான தீர்ப்பு வழங்கும் போதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்
நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன, ஏ மரிக்கார் ஆகிய நீதிபதிகளை கொண்ட மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)