இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் Queen Cobra பிரபாலினி பிரபாகரன் வழங்கும் இன்னிசை மழை இசை நிகழ்ச்சியும், ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி பரமேஸின்’ ‘உனக்கு தெரியுமா’ பாடலுடன் 50 பாடல்கள் அடங்கிய 50 வருட இசைத்தென்றல் தொடரின் இசைத்தட்டு வெளியீடு மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வு என்பன திங்கள் (27) மாலை கொழும்பு வெள்ளவத்தை சபையர் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெறும்.
பாராளுமன்ற உறுப்பினர்களான தமுகூ தலைவர் மனோ கணேசன், மமமு தலைவர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளும் இந்நிகழ்விற்கு மும்மொழிகளின் எழுத்தாளரும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவருமான முனைவர் சதீஷ் சிவலிங்கம் தலைமை தாங்குகிறார். தினகரன் தினசரி மற்றும் ஞாயிறு வெளியீடுகளின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் முன்னிலை வகிப்பதோடு புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் இசைத்தட்டுக்களின் முதற் பிரதிகளை பெறுவதோடு, மேனாள் கல்வி அமைச்சின் செயலாளர் தில்லை எஸ் நடராஜா, ஐமச உதவி செயலாளர் உமா சந்திரபிரகாஷ், ஐதேக மாவட்ட அமைப்பாளர் சு. ஆனந்தகுமார், மூத்த பாடகர்களான எஸ் முத்தழகு, எஸ் கலாவதி உள்ளிட்டோர் சிறப்பு பிரதிகளை பெறுகிறார்கள்.
ஊடகங்கள் சார்பாக வீரகேசரி பத்திரிகை தினசரி ஞாயிறு வெளியீடுகளின் பிரதம ஆசிரியர் எஸ் ஸ்ரீகஜன், சக்தி தொலைக்காட்சியின் பணிப்பாளர் எம். குலேந்திரரன், சூரியன் வானொலியின் பணிப்பாளர் எஸ். நவனீதன், கெப்பிட்டல் வானொலி தொலைக்காட்சியின் பொது முகாமையாளர் எம்.எப்.சியா உல்ஹசன், ரூபவாஹினி கூட்டுத்தாபன மூத்த ஊடகவியலாளர் யூ.எல்.யாக்கூப் , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மூத்த கலைஞர் நாகபூஷணி கருப்பையா, டான் தொலைக்காட்சி பணிப்பாளர் நிரோஷன் இராமானுஜம், டான் நிகழ்ச்சி நிறைவேற்று தயாரிப்பாளர் எம்.கவிதா உள்ளிட்ட கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.
1968 கள் தொடக்கம் ஈழத்து மெல்லிசை மன்னர் என பிரபலம் பெற்றுள்ள மூத்த கலைஞர் எம்பி பரமேஸின் மகளான பிரபாலினி பிரபாகரன் ஏற்கனவே ‘Cobra Queen’ என்ற ஆடியோ ஆல்பம் மூலமாகவும் ஏனைய படைப்புகள் வாயிலாகவும் புலம்பெயர்ந்த நாடுகளில் பிரசித்தி பெற்றுள்ளதோடு இவர் இயற்றி இசையமைத்துள்ள தாயக மண்வாசனை பாடல்கள் மூலமாகவும் ஈழத்தின் முதலாவது தமிழ் பெண் இசையமைப்பாளர் எனவும் அறியப்படுகிறார்.
திங்கள் (27) மாலை 3.30 மணிமுதல் முதல் வெள்ளவத்தை சபையர் ஹோட்டல் மண்டபத்தில் ஆரம்பமாகும் நிகழ்வில் பிரபாலினியுடன் மொஹமட் இர்பான் உள்ளிட்ட ரியோ கலைஞர்கள் வழங்கும் இன்னிசை மழையுடன் பல்வேறு கலை அம்சங்களும் இடம்பெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.