– மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் பொதிகள் நடுவே
– உதவி கணக்காளரான பெண் கடத்தல்காரர்களுடன் தொடர்பு
சுமார் 3 கி.கி. கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (21) எத்தியோப்பியாவின் (Addis Ababa) அடிஸ் அபாபாவிலிருந்து தோஹா நாட்டின் கட்டார் ஊடாக கட்டார் விமான சேவை மூலம் இலங்கைக்கு வந்த குறித்த பெண்ணை, இலங்கை விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணிடமிருந்த பயணப் பொதியில், 2.851 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக, சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இந்த கொக்கைன் தொகையின் தெரு மதிப்பு ரூ. 20 கோடிக்குகும் அதிகமாகும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 47 வயதான குறித்த பெண் அந்நாட்டில் உதவிக் கணக்காளர் என அவரிடமிருந்து மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது பயணப் பொதியில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கோதுமை மா அடங்கிய 3 பொதிகளுடன் கொக்கைன் போதைப்பொருள் அடங்கிய 3 பொதிகளையும் சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்.
சந்தேகநபரான பெண்ணின் நண்பியின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த போதைப்பொருள் இலங்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணுக்கு இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் 5 நாட்களுக்கு தங்குவதற்கு அவசியமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்மையும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.