நாட்டில் சுமார் 2,000 குழந்தைகள் (Beta thalassemia) பீட்டா தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தலசீமியா நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஈ. எம் ரஞ்சனி எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு, கொழும்பு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விசேட வைத்தியர் இதனை குறிப்பிட்டுள்ளார். தலசீமியா ஹீமோகுளோபின் உற்பத்தியில் குறைபாடுகளை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் நோய் என்பதால், குழந்தைகளுக்கு அதிக அளவு இரத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தலசீமியா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான செலவு சுகாதார அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோயால் பாதிக்கப்பட்ட தனிநபர் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலைமையை தடுப்பதற்கு, நாட்டில் தலசீமியா பிரசவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இதன்படி, தலசீமியா கேரியர் நிலையை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் தலசீமியா மேஜர் கொண்ட குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியுமென்று அவர் கூறியுள்ளார்.