விவசாயிகள் மத்தியில் விவசாயச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வளாகத்தில் துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகள் செய்கை பண்ணப்பட்டன.
இவற்றின் அறுவடை நேற்று முன்தினம் புதன்கிழமை (08)சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா பிரதம அதிதியாக கலந்துகொண்டு அறுவடையை தொடங்கி வைத்தார்.
இதன்போது விவசாய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவசமாக தெளிகருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஷ், விவசாயத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயப் போதனாசிரியர்கள் அடங்கலாக விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு சுழற்சி நிருபர்