மே தினமான இன்று புதன்கிழமை (01) கல்முனை மாநகர பொதுச் சந்தையை முழுமையாக மூடுவதாக, அப்பொதுச் சந்தை வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளாக இன்றையதினம் உள்ள நிலையிலேயே கல்முனை மாநகர பொதுச் சந்தையை மூடுவதாகவும், அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தின் முக்கிய பொருளாதார மையமாகத் திகழ்கின்ற கல்முனை மாநகர பொதுச் சந்தையின் வரலாற்றில் தொழிலாளர் சுதந்திரத்தை முன்னிலைப்படுத்தி இச்சந்தையை முழுமையாக மூடி தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது இது முதல் தடவையாகுமெனவும், அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இம்முறை இச்சந்தையை முழுமையாக மூடி, அனைத்து வியாபார நடவடிக்கைகளையும் இடைநிறுத்த சந்தை வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளதாகவும், அவர் கூறினார்.
ஆகையால் கல்முனை மாநகர பொதுச் சந்தையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கும் வகையில் இச்சந்தையில் பணியாற்றும் முதலாளிமார்கள் மே தினத்தன்று தமது வர்த்தக நிலையங்களை திறக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
சாய்ந்தமருது விசேட, கல்முனை விசேட நிருபர்கள்