திருகோணமலை வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட வெள்ளைமணல் பிரதேசத்தில் புதிய ஆரம்பப்பிரிவு பாடசாலையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (30) தொடங்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.ஏ.அதாஉல்லா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க, திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ரி.ரவி ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க உரையாற்றிய போது, கிழக்கு மாகாணத்தில் 1,125ஆவது பாடசாலையாக இப்பாடசாலை உள்ளதென்றார்.
வெள்ளைமணல் பிரதேசத்தில் ஓர் ஆரம்பப் பாடசாலை உருவாக்கப்பட வேண்டுமென்று அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அதாஉல்லா எம்.பி. விடுத்த கோரிக்கை ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கமைய இப்பிரதேசத்தில் ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் 4,000 ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதுடன், கல்வி அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை உள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
கிண்ணியா மத்திய நிருபர்