நாட்டின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது. இந்நாளில் எனது இதயம் கனிந்த மே தின வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை மே தினமாகும். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைப்பவர்களே தொழிலாள பெருமக்கள். அவர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
எமது நாட்டில் தொழிலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியிருக்கிறோம். தொழிலாளர் நலனுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் குரல் கொடுக்கும். தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும் நிம்மதியும் காண அயராது பாடுபடும் இயக்கமென்பதை உழைப்பாளர் சமுதாயம் நன்கறியும்.
உழைப்பாளர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறவும் அவர்களது குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கவும் வெற்றி பெருகவும் பிரார்த்திக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
கந்தளாய் தினகரன் நிருபர்