இலங்கையின் தெற்கே உள்ள மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவம் ரஷ்யா மற்றும் இந்தியா கூட்டு முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“ஐந்து தரப்பினர்கள் இதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்தன. 30 ஆண்டு ஒப்பந்தத்தில் ரஷ்யா-இந்தியா கூட்டு முயற்சிக்கு வழங்குவதற்கான முடிவை அமைச்சரவை அங்கீகரித்தது “என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஷௌர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்றும், ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் என்பனவே இந்த கம்பனிகளாகும்.
விமான நிலையத்திலிருந்து செயல்படும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு, தரையிறங்கும் மற்றும் பார்க்கிங் கட்டணங்களில் தள்ளுபடிகள் உட்பட விசேட சலுகைகள் வழங்கப்பட்ட பின்னரும், சீனாவால் கட்டப்பட்ட விமான நிலையம் வழக்கமான போக்குவரத்தை ஈர்ப்பதில் சிரமம் அடைந்துள்ளது.
விமான நிலையத்தின் இழப்புகள் 30 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா டிசம்பரில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் ஈரான் ஜனாதிபதி செய்யித் இப்ராஹிம் ரைசி ஏயார்பஸ் ஏ340 விமானத்தில் மத்தள விமான நிலையத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.