எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் பருவத்தில் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளராக பங்களாதேஷ் தொழிலதிபர்களான தமீம் ரஹ்மான் மற்றும் கோலம் ரகீம் தலைமையிலான இம்பீரியல் ஸ்போட்ஸ் குழுமம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் எல்.பி.எல். தொடரில் புதிய உரிமையாளரின் கீழ் தம்புள்ளை அணி தம்புள்ள தண்டர்ஸ் என்ற பெயரில் ஆடவுள்ளது.
இம்பீரியல் ஸ்போட்ஸ் குழுமம் ஐக்கிய இராச்சிய சந்தையினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதோடு, இந்த நிறுவனத்தின் இணை ஸ்தாபகர்களில் ஒருவரான தமிம் ரஹ்மான் எல்.பி.எல். தொடரில் புதிய அணியொன்றின் உரிமையாளர்களாக மாறியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை தம்புள்ளை தண்டர்ஸ் அணி தமது வீரர்கள் குழாத்தில் இணையும் முக்கிய வீரர்கள் குறித்த அறிவிப்பினை விரைவில் வெளியிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான எல்.பி.எல். தொடரானது டி20 உலகக் கிண்ணத்தின் நிறைவினை அடுத்து ஜூலை மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.