மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமென, இ.தொ.கா. தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் வலியுறுத்தினார்.
கொழும்பில் இ.தொ.கா.வால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை மாவட்டங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா. தீவிர முயற்சி எடுத்துள்ளதுடன், இது தொடர்பாக கம்பனிகளுக்கு சம்பள நிர்ணய சபை மற்றும் தொழில் அமைச்சினூடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
எதிர்வரும் புதன்கிழமை (24) சம்பள நிர்ணயசபை கூடவுள்ளதுடன், இதன்போது சாதகமான முடிவு கிட்டுமென நம்புவதாகவும், அவர் கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வென்றெடுக்க தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டுமென்பதுடன், தொழிலாளர்களும் இதை எதிர்பார்க்கின்றனர். தொழிலாளர்களின் நலன் கருதி இ.தொ.கா. அனைவரையும் அரவணைத்துக்கொண்டு தொழிற்சங்க சமரை முன்னெடுக்க எதிர்பார்க்கிறது. தேர்தல் காலத்தில் அரசியல் செய்யலாம். சம்பள விடயத்தில் அரசியலை திணிக்க வேண்டாமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
ஹற்றன் சுழற்சி நிருபர்