கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று (19) நடைபெற்றது.
வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு புத்தக வடிவிலிருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கேற்ற வகையில் கடற்றொழில் நடவடிக்கைக்காக தயாரிக்கப்படும் புதிய சட்டமூல வரைபு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இக்கலந்துரையாடல் நடைபெற்றதுடன், இப்புதிய சட்டமூலம் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து கடற்றொழில் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் தவராசா வளவாளராக கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
மீன்பிடி நடவடிக்கை உரிமம் வழங்கலிலுள்ள பொதுவான கோட்பாடுகள், மீன்பிடி உரிமத்தின் காலஎல்லை, மீன்பிடி நடவடிக்கை உரிமங்களின் கைமாற்றம், வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை நடத்துவதற்கான மீன்பிடி உரிமத்தை புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அமைச்சின் துறைசார் உத்தியோகத்தர்கள், அமைச்சின் சட்ட ஆலோசகர், துறைசார் வல்லுநர்கள், சமாச உறுப்பினர்கள், யாழ். மாவட்ட கடற்றொழில் சங்க உறுப்பினர்களாகிய பலர் இதில் கலந்துகொண்டனர்.