ஈரானின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் இருந்து அமைதி காப்பதற்கு நெருங்கிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் தமது பாதுகாப்பு குறித்து சுயமாக முடிவெடுக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்ல விமானங்கள் கொண்டு நேரடித் தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேலை அமைதிப்படுத்தும் முயற்சியாக ஈரான் மீது தடைகளை விதிக்கும் திட்டத்தை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 நாடுகள் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் பிராந்தியத்தில் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் இஸ்ரேல் பயணித்தனர். கடந்த புதன்கிழமை (17) அவர்களை சந்தித்த நெதன்யாகு, ‘நாம் எமது சுயமுடிவை எடுப்போம் என்பதோடு இஸ்ரேல் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நான் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ என்றார்.
இஸ்ரேல் பதில் தாக்குதல் ஒன்றை நடத்தினால் கடுமையாக பதிலடி கொடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
எனினும் இந்த வாரத்துக்குள் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக குறைந்தது இரு முறை பதில் தாக்குதல் ஒன்றை நடத்த தயாராகி பின்னர் கைவிட்டதாக மூன்று இஸ்ரேலிய தரப்புகளை மேற்கோள்காட்டி ஏ.பி.சி. நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.