யாழ். பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ்ரன் சவேரியார் தேவாலயத்தில் மருதமடு அன்னையின் திருச்சொரூபம் நேற்று வியாழக்கிழமை (18) வைக்கப்பட்டு விசேட ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ்ரன் சவேரியார் தேவாலயத்துக்கு மருதமடு அன்னையின் திருச்சொரூபம் வைக்கப்படுவதற்கு முன்னர் நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மருதமடு அன்னையின் அருளை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் பெருமளவான பக்தர்கள், பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ்ரன் சவேரியார் தேவாலயம் மற்றும் நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். மருதமடு அன்னையின் வருகையால் நெல்லியடி, பருத்தித்துறை நகரங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன.
கரவெட்டி தினகரன் நிருபர்