கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடகப் பணியை கௌரவிக்கும் முகமாக மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் (Perth) மாநகரில் ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.
தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ. சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் மாநகரில் நடைபெறவுள்ளது.
தினகரன் பத்திரிகையில் நீண்ட காலம் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய கலாசூரி இ.சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துகளை சொல்வதில் வல்லவர். அவரின் நினைவாக இந்நூல் வெளியிடப்படுகின்றது.
Hillview Intercultural Community Centre, 1 Hill View Place, Bentley, Western Australia என்ற முகவரியில் 01.06.2024 மாலை 3.30 முதல் 5.30 வரை நிகழ்வு நடைபெறும்.
மூத்த தமிழ் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமான ெடாக்டர் அமீர் அலி தலைமையில் இந்நூல் வெளியீடு நடைபெறவுள்ளது. தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் தினகரன் ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதன் இலங்கை இலக்கியப் பரப்பிலும், ஊடகத்துறையிலும் தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக் கொண்டவர்.
இந்நிகழ்வில் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமான நிலக்ஷன் ஸ்வர்ணராஜா நூலை அறிமுகம் செய்து சிறப்புரை வழங்குவார். அதன் பின்னர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி ஜனனி சிவமைந்தன் இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதன் நூல் பற்றிய சிறப்புரையை நிகழ்த்துவார்.
தினகரனில் சிவகுருநாதன் ஆற்றிய பணி பற்றி எடுத்தியம்பும் இந்நூலின் சிறப்புரையை எழுத்தாளரும், நூலக ஆவண காப்பாளருமான கோபிநாத் தில்லைநாதன் ஆற்றுவார். அத்துடன் ெடாக்டர் சி. பாஸ்கரநாதனும் இந்நூல் பற்றி சிறப்புரை ஆற்றுவார். சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூலின் தொகுப்பாசிரியர் ஐங்கரன் விக்கினேஸ்வரா நூலின் ஏற்புரையை வழங்குவார்.
இதன் பின் பேர்த் மாநகரில் இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, தொகுத்து வழங்கும் புகழ் பெற்ற பாடகரும், இலக்கிய ஆர்வலருமான ராஜன் வடிவேல் வழங்கும் நன்றியுரையுடன் விழா நிறைவுபெறும்.
மூன்று பாகங்களாக வெளிவரும் ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ நூலில் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாத்த கலாசூரி சிவகுருநாதன் ஆற்றிய பெருங்கடமையை ஊடக, இலக்கிய அறிஞர்களின் திறனாய்வு கட்டுரைகள் அலங்கரிக்கின்றன.
இந்நூலின் முதல் அங்கமான ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குக் களம் தந்த தினகரன் சிவகுருநாதன்’ எனும் பகுதியில் அவரைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள், திறனாய்வு ஆக்கங்களை பல ஊடக ஆளுமையாளர்கள் எழுதியுள்ளனர்.
இரண்டாம் அங்கத்தில் ‘பத்திரிகை ஆசிரியர்களுள் – மக்கள் திலகம்’ எனும் பகுதியாக அவரைப் பற்றிய அரசியல் வல்லுநர்களின் அஞ்சலிகளும், ஆராதனைகளும் இடம்பெற்றுள்ளது.
இந்நூலில் ‘பூமாலைக்கு ஏன் பாமாலை’ எனும் மூன்றாம் பகுதியில் சிவகுருநாதன் சிந்தனைகளை பல கவிஞர்கள் வடித்துள்ளனர். தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் கலாசூரி சிவகுருநாதன் பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் முன்னின்றதற்கு சாட்சியமாக இக்கவிதைகள் உள்ளன.
ஐங்கரன் விக்கினேஸ்வரா