வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டு பெருவிழா அண்மையில் நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்வாக ரீதியாகவும், மக்களின் தேவைகள் தொடர்பாகவும் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுகின்றது.
இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக பொது அமைப்புகள் ஊடாக பல்வேறு கோரிக்கைகள் கிடைக்கின்றன. அவற்றை சாதகமான முறையில் பரிசீலித்துவருகின்றோம். வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களை கோட்டக்கல்வி பணிப்பாளர்களும், வலயக்கல்விப் பணிப்பாளர்களும் மேற்கொண்டு வருவதால், ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு அறிக்கையிடாமல் இருப்பது பாரிய ஒரு சிக்கல் நிலையாகவே காணப்படுகின்றது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறும், உரிய தரவுகளை சேகரிக்குமாறும், பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களை நியமித்து வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். மேலும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.