திறைசேரி மூலம் பணம் ஒதுக்க நடவடிக்கை
அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்றும் அதற்காக 54,800 மெற்றிக் தொன் அரிசி விநியோகஸ்தர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க மாவட்டச் செயலாளர்களே அதற்கான அரிசி கொள்வனவை மேற்கொள்வர் என்றும் அதற்கான நிதியை திறைசேரி மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் விரிவாக முன்னெடுக்குமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வீதம் வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் விநியோகம் பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அஸ்வெசும பயனாளிகள் நலன்புரி திட்டத்திற்காக மேன்முறையீடு செய்த மக்களில் நலன்புரி நன்மைகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அஸ்வெசும திட்டத்தின் மூலம் பயன்பெறாத சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும அல்லது சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்காத மேலதிக நிதியுதவிகள் பெறும் முதியோர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோயுற்றோர்களுக்காக இந்த அரிசி வழங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவையான 54,800 மெட்ரிக் தொன் அரிசியை விநியோகஸ்தர்களிடமிருந்து மாவட்டச் செயலாளர்கள் கொள்முதல் செய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம்